செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

Sasikala சொத்து குவிப்பு வழக்கு சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என தீர்ப்பு 4 ஆண்டுகள் சிறை உறுதி

வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சத் துக்கு சொத்து சேர்த்ததாக மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது பெங்களூரு தனிக்கோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டது.

இந்த வழக்கில் அவர்கள் நான்கு பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, தனிக்கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்ததோடு, நால்வரையும் விடுதலை செய்தது.

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசின் சார்பிலும், தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங் கிய அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 7-ந் தேதி இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முதல்- அமைச்சர்  ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார்.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பினாகி சந்திரகோஷ் தலைமையிலான அமர்வு கடந்த 6-ந் தேதி அறிவித்தது.

அதன்படி, நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று  தீர்ப்பு வழங்கியது. இதற்காக நீதிபதிகள் இன்று காலை 10. 30 மணிக்கு  நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய்  ஆகியோர் நீதிமன்றம் வந்தனர். தீர்ப்பு வழங்கும் 6-வது எண் அறையில் கூட்டநெரிசலாக உள்ளது.

நீதிபதிகள் தீர்ப்பை வாசிக்க தொடங்கி உள்ளனர். அதன் முக்கிய அம்சம் வருமாறு:-

இந்த வழக்கில் அடுத்தடுத்த குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும்  குற்றவாளிகள் என்று அறிவிக்கிறோம். அவர்களை விடுவித்து கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு செல்லாது. அந்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது.

நீதிபதி குன்கா இந்த வழக்கில் அளித்த தீர்ப்பு செல்லும். எனவே அதன்படி  வருமானத்துக்கு அதிகமாக முறைகேடாக சொத்து சேர்த்த  வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் தலா 4 ஆண்டுகள்  ஜெயில் தண்டனை உறுதி செய்யப்படுகிறது.



3 பேருக்கும் தலா ரூ. 10 கோடி விதிக்கப்பட்ட அபராதம் உறுதி செய்யப்படு கிறது. தண்டனை வழங்கப்பட் டுள்ள 3 பேரும் கோர்ட்டில் உடனடியாக சரண் அடைய வேண்டும். 

அவர்களை ஜெயிலில் அடைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு  நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள்.


( Thanks தினத்தந்தி / Thina Thanthi,  )

Tamil Nesan Malaysia ePaper 14-FEB-2017 தமிழ் நேசன்