திங்கள், 27 ஆகஸ்ட், 2012

தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு, கச்சத்தீவு மீட்பு - அதிமுக செயற்குழுவில் தீர்மானம்





சென்னை: தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு தர வேண்டும், கச்சத் தீவை மீட்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கூடிய அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த இக்கூட்டத்துக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:

தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் மறுவாழ்வு மற்றும் மீட்புப் பணிகளை சிறப்பாக செயல்படுத்திய முதல்வர் ஜெயலலிதாவுக்கு இக்கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் பல்வேறு சாதனைத் திட்டங்களை செயல்படுத்தியமைக்கும் முதல்வரை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் என்.வரதராஜன், பா.ஜ.க. முன்னாள் செயலாளர் சுகுமாரன் நம்பியார், புதுக்கோட்டை தொகுதி முன்னாள எம்.எல்.ஏ. முத்துக்குமரன் மற்றும் சமூகத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களின் மறைவுக்கு இக்கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தி வரும் தாக்குதலை நிறுத்துவதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.

மேலும் இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை மத்திய அரசு கைவிடவேண்டும். கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டு உலைகளிலும் உற்பத்தியாக உள்ள 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தையும் தமிழகத்திற்கே வழங்கவேண்டும். தமிழகத்திற்கு தேவையான அளவு மண் எண்ணையை மத்திய அரசு வழங்க வேண்டும்.

மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தகக்து. காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்தை கூடனே கூட்டவேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை: