சனி, 18 அக்டோபர், 2014

ஜாமீனுக்குப் பிறகு ஜெயலலிதா என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கிய நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான ஜெயலலிதா என்னவெல்லாம் செய்யலாம் அல்லது செய்ய முடியாது என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் சில வழக்கறிஞர்களிடம் விசாரித்த போது அவர்கள் கூறிய தகவல் வருமாறு:–

தற்போது தண்டனை மீதான இடைக்காலத் தடை மற்றும் ஜாமீன் பெற்ற நிலையில் ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராகவோ முதல்–அமைச்சராகவோ ஆகமுடியாது.

ஆனால் அவருடைய ஜாமீன் குறித்து எந்த நிபந்தனையையும் நீதிமன்றம் விதிக்காததால், அவரால் முழுமையாக கட்சிப்பணியாற்ற முடியும்.

தேர்தலில் பிரச்சாரம் செய்ய முடியும். கட்சி கூட்டங்களை தலைமையேற்று நடத்த முடியும்.

தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அவருடைய கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாகவும் பொறுப்புகளில் உள்ளதாலும் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அனைத்து அமைச்சர்களையும் அழைத்து கட்சித்தலைவர் என்ற முறையில் ஆலோசனைகள் நடத்த எந்தத் தடையும் இல்லை.

ஆனால் அரசாங்க விஷயத்தில் எந்தவிதமான பணிகளையும் மேற்கொள்ள முடியாது. எந்த வகையான அதிகாரத்தையும் செலுத்த முடியாது.


மேலும் சுப்ரீம் கோர்ட்டு எந்த வகையான நிபந்தனையும் விதிக்காததால் பெரிய அரசியல் கட்சி ஒன்றின் தலைவி என்ற முறையில் தமிழக மக்களின் நலனுக்காக அல்லது ஏதாவது ஒருநலத்திட்டம் தொடர்பாகவோ நிதி ஒதுக்கீடு தொடர்பாகவோ ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் அல்லது மத்திய அமைச்சர்களையோ சந்திக்க எந்தவகையான தடையும் இல்லை.

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் கட்சித்தலைவி என்ற முறையில் கட்சித் தலைமையகத்தில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்த முடியும்.

கட்சித்தலைவி என்ற முறையில் மாநில அரசு மற்றும் மத்திய அரசின் கீழ் உள்ள ஆணையங்களின் கூட்டங்களில் கலந்து கொள்ளவும் எந்தவகையான தடையும் இல்லை.

கருத்துகள் இல்லை: