திங்கள், 21 ஜூலை, 2014

2014 Nellai Marathon Event நெல்லை மாரத்தான்

https://www.facebook.com/STMNellai2014?fref=ts


 5 ஆயிரம் பேர் பங்கேற்ற மாரத்தான் !

நெல்லை, ஜூலை.21-

பாளையங்கோட்டையில் நேற்று ( 20-ஜூலை-2014)  நடந்த மாரத்தான் போட்டியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினார்கள்.

மாரத்தான் போட்டி


பாளையங்கோட்டையில் தென் தமிழ்நாடு-2014என்ற பெயரில் மாரத்தான் நீண்டதூர ஓட்டப்பந்தயம் நேற்று நடைபெற்றது. இந்த போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் இருந்து காலை 6 மணிக்கு தொடங்கியது. போட்டியை நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் 21.1 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் என 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.

5 ஆயிரம் பேர்

இந்த போட்டிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டப்பந்தய வீரர்கள் கலந்து கொண்டார்கள். இதில் 3 ஆயிரம் பேர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் ஆவார்கள். இதில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு ஓடினார்கள்.

மாரத்தான் ஓட்டம் பல்வேறு சாலைகள் வழியாக சென்று மீண்டும் மகாராஜ நகர் மற்றும் மருத்துவ கல்லூரி வழியாக அண்ணா ஸ்டேடியத்தில் முடிவடைந்தது. மாரத்தான் ஓட்டம் நடைபெற்ற பகுதியில் முதலுதவி நிலையங்கள், குடிநீர் பந்தல்கள், மருத்துவ வசதிகள், ஆம்புலன்ஸ் சேவைகள் ஆகியவை அமைக்கப்பட்டு இருந்தன.

மராத்தான் போட்டியில் பங்கேற்று ஓடியவர்களில் ஒருசிலர் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டன.

இந்த போட்டியால் பாளையங்கோட்டை பகுதி ஓட்டப்பந்தய வீரர்களின் தலைகளாக காட்சி அளித்தது.

வெற்றி பெற்றோர் விவரம்

இந்த போட்டியில் 21.1 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டி ஆண்கள் பிரிவில் ஜோஜி மாத்தியூ, ராஜா கெம்பையா, பி.அருண்குமார் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை பிடித்தார்கள்.

பெண்கள் பிரிவில் சுப்புலட்சுமி, ஆறுமுகக்கனி, பி.முத்துமாரி ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். முதல் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும், 2-வது இடத்தை பிடித்தவர்களுக்கு ரூ.15 ஆயிரமும், 3-வது இடத்தை பிடித்தவர்களுக்கு 10 ஆயிரமும் ரொக்கப்பரிசுடன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

10 கிலோ மீட்டர் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் ஏ.மனோ, அரங்கமுத்து, பி.கே.அனில்குமார் ஆகியோர் முதல் 3 இடத்தையும், பெண்கள் பிரிவில் பத்மாவதி, ஸ்மித்ரா, ஸ்ரீமுகுந்தா ஆகியோர் முதல் 3 இடங்களையும் பிடித்தனர்.

அவர்களில் முதல் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.15 ஆயிரமும், 2-வது இடத்தை பிடித்தவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், 3-வது இடம் பிடித்தவர்களுக்கு ரூ.5 ஆயிரமும் ரொக்கப்பரிசுடன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதே போல் 5 கிலோ மீட்டர் பிரிவில் ஓடியவர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கமும் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பாராட்டு


இந்த நிகழ்ச்சிகளில் ஸ்டார்ட் அமைப்பின் தலைவர் ராய் சுப்பிரமணியன், இயக்குனர் சிவசுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளர்கள் வி.பி.துரை, பிச்சைக்கண்ணு, ஏ.வி.எல்.துரைகுமார், அர்சியா நவ்ஷின், நெல்லை நேச்சர் கிளப் அரிபிரதாபன், தீபக் ஜெரி, ஜேம்சன், டைட்டன் ஷோரூம் அரிகிருஷ்ணன், வெல் ஜூடு, சூடிராஜன், வோட போன் நிறுவன தமிழ்நாடு வர்த்தக பிரிவு தலைவர் திலீப் குமார் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள், மூத்த விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வோடபோன் நிறுவனம், ஸ்டார்ட், ஷோ ஸ்பேஸ் உடன் இணைந்து சவுத் தமிழ்நாடு அசோசியேஷன் ஆப் ரன்னர்ஸ், ரைடர்ஸ் மற்றும் டிரெக்கர்ஸ் உள்பட பல்வேறு நிறுவனங்கள், விளையாட்டு அமைப்புகள் இணைந்து இந்த போட்டியை நடத்தினார்கள்.

----------------------------------------------------------------------------------------

News Thanks : தினத்தந்தி 

Site : http://vodafonesouthtamilnadumarathon.com/

Facebook :  STMNellai2014

----------------------------------------------------------------

கருத்துகள் இல்லை: