வியாழன், 12 ஏப்ரல், 2012

இலங்கைக்கு செல்லும் இந்திய கூட்டுக்குழுவில் அதிமுக விலகல் !



இலங்கைக்கு செல்லவுள்ள இந்திய கூட்டுக்குழுவில் அதிமுக வை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் ரபி பெர்னார்டு பங்கேற்க மாட்டார் என தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா நேற்று அறிவித்திருந்தார்.




முன்னர் கூட்டுக்குழுவில் ரவி பெர்னார்டுவின் பெயர் இடம்பெற்றிருந்த போதும் தற்போது திடீரென்று நீக்கப்பட்டிருப்பதற்கான காரணத்தை முதல்வர் இவ்வாறு விளக்குகிறார்.



இந்திய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் இலங்கைப் பயணம் அங்குள்ள தமிழர்களுக்கு பயனளிப்பதாக இருக்கும், அவர்களோடு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாகச் கலந்துரையாடினால் அது தமிழர்களுக்கு ஆறுதலாகவும், உண்மை நிலவரங்களை தெரிந்துகொள்ள உதவும் என்றும் நம்பினேன். அவர்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள மறுவாழ்வு நடவடிக்கைகளை பார்வையிட்டு, அவற்றில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டவும் அது உதவும் என்ற எண்ணத்தில் தான் அ.தி.மு.க. சார்பில் ஓர் உறுப்பினரை அனுப்ப நான் சம்மதித்தேன்.



இந்தச் சூழ்நிலையில், இலங்கை பயணம் குறித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரல் தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் நேரிடையாக கலந்துரையாடவும், அவர்களின் உள்ளக் குமுறல்களை கேட்டு அறியவும் வாய்ப்பு இல்லாததாக அமைந்துள்ளது.

இலங்கை அதிபர் ராஜபக்ஷே உட்பட சிங்கள அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடனான கூட்டங்கள் மற்றும் விருந்துகள் ஆகியவற்றிற்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரலை பார்க்கும் போது, இது ஏதோ சம்பிரதாயத்திற்காக நடத்தப்படும் சுற்றுப் பயணம் போலவும், இது இலங்கை அரசால் அவர்களுக்கு சாதகமாக ஒரு கருத்து இந்தியாவில் எற்பட தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் போலவும் தான் தெரிகிறது.



இது மட்டுமல்லாமல், இக்குழுவில் பத்திரிகையாளர்கள், மனித உரிமைகளில் ஆர்வம் உடையவர்கள், சுதந்திரமான கண்காணிப்பாளர்கள் யாரும் இடம் பெறாதது எனது ஐயத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்தக் குழுவின் பயணமும், ஏற்கெனவே தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடன் விருந்துண்டு, பரிசுப் பொருட்களை பெற்றது போல் ஒரு கண்துடைப்பு ஏற்பாடாக ஆகிவிடும் என்று நான் கருதுகிறேன்.



ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழுவின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் மென்மையான தீர்மானத்தைக் கூட இலங்கை அதிபர் ராஜபக்ஷே ஏற்றுக் கொள்ள முன்வராத நிலையிலும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை ராஜபக்ஷே அரசு தடுத்து நிறுத்தாததாலும், தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக சர்வதேச அணுமின் முகமையிடம் இலங்கை முறையிட உள்ளதாக செய்திகள் வந்துள்ளதன் அடிப்படையிலும், தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ராஜபக்ஷே அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாலும், இலங்கைத் தமிழர்கள் மீதான அணுகுமுறையில் இலங்கை அரசிடம் எந்தவிதமான மாற்றமும் தெரிய வராததாலும், இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு, மீள்குடியமர்த்தல் ஆகியவை பற்றியும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் நேரில் காணும் யதார்த்தங்களை பற்றியும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேயுடன் விவாதம் செய்ய வாய்ப்பு தரப்படாமல் சுற்றுப் பயணத்தின் கடைசி நாளில் அதிபர் ராஜபக்ஷேவுடன் காலை விருந்துக் கூட்டம் என்பது மட்டும் பயணக் குறிப்பில் இடம் பெற்றுள்ளது ஏமாற்றமளிக்கிறது என்பதாலும், இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விலகிக் கொள்கிறது என்பதையும், இந்தக் கூட்டுக் குழுவில் அ.தி.மு.க.வை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் ரபி பெர்னார்டு பங்கேற்க மாட்டார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

கூடங்குளம் மின்சாரம் தமிழகத்துக்கே தர வேண்டும் ! ஜெயலலிதா கடிதம்




கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே தர வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் !





















சென்னை, மார்ச் 31: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரு யூனிட்டுகளிலும் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே தர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தின் விவரம்:
கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு யூனிட்டுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இரண்டிலும் சேர்த்து 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. அதில், தமிழகத்துக்கு 925 மெகாவாட் மின்சாரம் அளிக்கப்படவுள்ளது.
மத்திய மின் தொகுப்பில் இருந்து தமிழகத்துக்குக் கூடுதலாக ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டுமென்று தங்களிடம் கடந்த ஆண்டு கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால், 100 மெகாவாட் மின்சாரமே அளிக்கப்பட்டுள்ளது.






தமிழகம் கடுமையான மின் பற்றாக்குறையைச் சந்தித்து வரும் நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் அனைத்தையும் தமிழகத்துக்கே வழங்குவதுதான் சரியாக இருக்கும்.
மின்பாதையில் பிரச்னை: மேலும், வெளிமாநிலங்களில் இருந்து பெறும் மின்சாரத்தை தமிழகத்துக்குக் கொண்டு வருவதற்கான மின்பாதையில் பிரச்னை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதையும் தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
தமிழகத்தின் கோரிக்கையை சாதகமான வகையில் பரிசீலிக்கும்படி தங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.





-----





தினத்தந்தி





-----





தினமணி





சசிகலா மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது-ஜெயலலிதா அறிவிப்பு



சூரியகாந்தி - மலையகத்தின் தனித்துவக்குரல் !



சூரியகாந்தி - மலையகத்தின் தனித்துவக்குரல்



சூரியகாந்தி வார
இதழை பிரதி புதன்தோறும் இ-பேப்பர் வடிவில் பார்வையிடலாம்.

உங்கள் அபிமான சூரியகாந்தி பத்திரிகையை இணையத்தில் இலவசமாக வாசிக்க "click here to register ' 



இலங்கையின் இந்தியத் தமிழர் / மலையகத்_தமிழர்