வியாழன், 12 ஏப்ரல், 2012

இலங்கைக்கு செல்லும் இந்திய கூட்டுக்குழுவில் அதிமுக விலகல் !



இலங்கைக்கு செல்லவுள்ள இந்திய கூட்டுக்குழுவில் அதிமுக வை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் ரபி பெர்னார்டு பங்கேற்க மாட்டார் என தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா நேற்று அறிவித்திருந்தார்.




முன்னர் கூட்டுக்குழுவில் ரவி பெர்னார்டுவின் பெயர் இடம்பெற்றிருந்த போதும் தற்போது திடீரென்று நீக்கப்பட்டிருப்பதற்கான காரணத்தை முதல்வர் இவ்வாறு விளக்குகிறார்.



இந்திய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் இலங்கைப் பயணம் அங்குள்ள தமிழர்களுக்கு பயனளிப்பதாக இருக்கும், அவர்களோடு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாகச் கலந்துரையாடினால் அது தமிழர்களுக்கு ஆறுதலாகவும், உண்மை நிலவரங்களை தெரிந்துகொள்ள உதவும் என்றும் நம்பினேன். அவர்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள மறுவாழ்வு நடவடிக்கைகளை பார்வையிட்டு, அவற்றில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டவும் அது உதவும் என்ற எண்ணத்தில் தான் அ.தி.மு.க. சார்பில் ஓர் உறுப்பினரை அனுப்ப நான் சம்மதித்தேன்.



இந்தச் சூழ்நிலையில், இலங்கை பயணம் குறித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரல் தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் நேரிடையாக கலந்துரையாடவும், அவர்களின் உள்ளக் குமுறல்களை கேட்டு அறியவும் வாய்ப்பு இல்லாததாக அமைந்துள்ளது.

இலங்கை அதிபர் ராஜபக்ஷே உட்பட சிங்கள அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடனான கூட்டங்கள் மற்றும் விருந்துகள் ஆகியவற்றிற்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரலை பார்க்கும் போது, இது ஏதோ சம்பிரதாயத்திற்காக நடத்தப்படும் சுற்றுப் பயணம் போலவும், இது இலங்கை அரசால் அவர்களுக்கு சாதகமாக ஒரு கருத்து இந்தியாவில் எற்பட தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் போலவும் தான் தெரிகிறது.



இது மட்டுமல்லாமல், இக்குழுவில் பத்திரிகையாளர்கள், மனித உரிமைகளில் ஆர்வம் உடையவர்கள், சுதந்திரமான கண்காணிப்பாளர்கள் யாரும் இடம் பெறாதது எனது ஐயத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்தக் குழுவின் பயணமும், ஏற்கெனவே தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடன் விருந்துண்டு, பரிசுப் பொருட்களை பெற்றது போல் ஒரு கண்துடைப்பு ஏற்பாடாக ஆகிவிடும் என்று நான் கருதுகிறேன்.



ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழுவின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் மென்மையான தீர்மானத்தைக் கூட இலங்கை அதிபர் ராஜபக்ஷே ஏற்றுக் கொள்ள முன்வராத நிலையிலும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை ராஜபக்ஷே அரசு தடுத்து நிறுத்தாததாலும், தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக சர்வதேச அணுமின் முகமையிடம் இலங்கை முறையிட உள்ளதாக செய்திகள் வந்துள்ளதன் அடிப்படையிலும், தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ராஜபக்ஷே அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாலும், இலங்கைத் தமிழர்கள் மீதான அணுகுமுறையில் இலங்கை அரசிடம் எந்தவிதமான மாற்றமும் தெரிய வராததாலும், இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு, மீள்குடியமர்த்தல் ஆகியவை பற்றியும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் நேரில் காணும் யதார்த்தங்களை பற்றியும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேயுடன் விவாதம் செய்ய வாய்ப்பு தரப்படாமல் சுற்றுப் பயணத்தின் கடைசி நாளில் அதிபர் ராஜபக்ஷேவுடன் காலை விருந்துக் கூட்டம் என்பது மட்டும் பயணக் குறிப்பில் இடம் பெற்றுள்ளது ஏமாற்றமளிக்கிறது என்பதாலும், இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விலகிக் கொள்கிறது என்பதையும், இந்தக் கூட்டுக் குழுவில் அ.தி.மு.க.வை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் ரபி பெர்னார்டு பங்கேற்க மாட்டார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

1 கருத்து:

cineikons சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.