திங்கள், 27 ஜூலை, 2015

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மாரடைப்பால் காலமானார் !

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மாரடைப்பால் காலமானார். 
 
 
கருத்தரங்கு ஒன்றில் பேசிக் கொண்டிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம்.-ல் இன்று கருத்தரங்கு நடைபெற்றது. அதில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாலை சுமார் 6 மணியளவில் மேடையில் பேசிக் கொண்டிருந்தார்.
 
அவரது எழுச்சி உரையை மாணவர்களும் பேராசிரியர்களும் ஆவலுடன் கேட்டுக்கொண்டிருந்தனர். சுமார் 6.30 மணியளவில் மேடையில் பேசிக் கொண்டிருந்த கலாம் திடீரென மார்பை பிடித்துக் கொண்டு அப்படியே சரிந்தார். இதனால் மேடையில் இருந்தவர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, மயங்கி விழுந்த அப்துல் கலாம் நாங்ரிம் மலைப் பகுதியில் உள்ள பெத்தானி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் செயற்கை சுவாசம் அளித்தனர். எனினும் இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 
 
இதையடுத்து கலாம் மாரடைப்பால் காலமானதாக மருத்துவர்கள் அறிவித்தனர். தகவல் அறிந்த மேகாலயா ஆளுநர் ஷண்முகநாதன் மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். நாளை காலை ஹெலிகாப்டர் மூலம் கவுஹாத்தியிலிருந்து டெல்லியில் உள்ள ராணுவ தலைமை அலுவலகத்திற்கு அப்துல் கலாம் உடல் கொண்டுவரப்படுகிறது.
 
83 வயதான அப்துல் கலாம் தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் 1931 ஆம் ஆண்டு பிறந்தார். ஜுலை 25- 2002 முதல் ஜுலை 25- 2007 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக கலாம் பதவி வகித்தார். பொக்ரான் அணுகுண்டு சோதனையின் போது பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராக அவர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: