வெள்ளி, 6 ஜூன், 2014

தமிழ்மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைத்த தினம் Tamil Classical Language June6

தமிழ்மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைத்த தினம் தமிழ் மொழியின் வரலாற்றை 2000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று சிறு வட்டத்திற்குள் அடைத்தாலும், இதுவரை மொழியின் தோற்றம் குறித்து முழுமையாக ஆராயப்படவில்லை. எழுத்து, சொல், பொருளுக்கு இலக்கணம் வகுத்து, ஐம்பெங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், நீதி இலக்கியங்கள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு உள்ளிட்ட ஏராளமான படைப்புகளை உள்ளடக்கிய பழமையான மொழி தமிழ் மொழி. இத்தகு பெருமை வாய்ந்த தமிழ் மொழிக்கு, இலக்கியத்தின் பழமையை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் செம்மொழி அங்கீகாரம் 2004-ம் ஆண்டு இதே நாளில்தான் தமிழ் மொழிக்குக் கிடைத்தது. நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் இதற்கான அறிவிப்பை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வெளியிட்டார். -------------------------------------------------- இந்தியாவில் சுமார் 1,600 மொழிகள் பேசப்படு கின்றன. அவற்றில் 22 மொழிகளை இந்தியாவின் ஆட்சி மொழிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அவற்றில் சம்ஸ்கிருதமும் தமிழும் அடங்கும். அறிஞர் கால்டுவெல் திராவிட மொழிகளை ஒப்பிட்டு 1856-ல் ஒரு ஆங்கில நூலை எழுதினார். அதில் தமிழின் தொன்மையை விளக்கினார். அது உலக அளவில் விவாதிக்கப்பட்டது. அவருக்கு அடுத்தபடியாக, பேராசிரியர் பரிதிமாற் கலைஞர் தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என 1902-ல் கோரிக்கை விடுத்தார். அதன் பிறகு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புகளும் அறிஞர்களும் இது தொடர்பாகப் பல முயற்சிகளை எடுத்தனர். அதன் விளைவாக, இந்திய அரசால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்ட நாள் இன்று. செம்மொழி என இந்திய அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் இந்திய மொழி தமிழ்தான். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 - ம் ஆண்டில் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்தியாவில் தற்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆட்சிமொழியாகத் தமிழ் இருக்கிறது. இலங்கையில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழ் இடம்பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது குறிப்பிடத் தக்கது. --------------------------------------------------------

கருத்துகள் இல்லை: