புதன், 20 பிப்ரவரி, 2013

இலங்கையில் ஹிட்லர் ஆட்சி; பாலச்சந்திரன் படுகொலை குறித்து தமிழக முதல்வர் கண்டனம்



தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பன்னிரண்டு வயதுச் சிறுவனை கொன்றது மாபெரும் போர்க்குற்றம் எனக் கண்டித்துள்ளதுடன், இதற்குக் காரணமானவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க ஐ.நாவில் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இன்று தலைநகர் சென்னையில் முதல்வர் வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு கண்டித்திருக்கிறார்.

இதைவைத்துப் பார்க்கையில் இலங்கையில் நடப்பது ஹிட்லரின் ஆட்சிதான் நினைவில் வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் இவ்விடயம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,
பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் ஈவு இரக்கமின்றி இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். அந்த 12 வயது குழந்தை எந்த குற்றமும் புரியவில்லை.

பிரபாகரனின் மகனாக பிறந்த ஒரே காரணத்துக்காக இலங்கைஈராணுவம் அவனை சுட்டுத் தள்ளியுள்ளது. இதற்கான ஆதாரங்கள் பல பத்திரிகைகளில், ஊடகங்களில் வெளிவந் துள்ளன.

இந்த ஆதாரங்களையும், இன்னும் பல தகவல்களையும் பார்க்கும்போது தற்போதுள்ள இலங்கை அரசின் தன்மை, மனப்பான்மை, எண்ணம் ஆகியவை முன்பு ஜெர்மனி நாட்டில் ஹிட்லரின் ஆட்சியில் நடந்ததுதான் ஞாபகத்திற்கு வருகிறது.

ஹிட்லர் ஆட்சியில் யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். அதேபோல், இன்று இலங்கை அரசு தமிழர்களை இனப்படுகொலை செய்திருக்கிறது. எனவே மத்திய அரசு இதனை கவனத்தில் கொண்டு அமெரிக்கா மற்றும் ஒத்த கருத்துடைய நாடுகளுடன் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை கவனத்தில் கொண்டு இவற்றிற்கு காரணமானவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும்.

இதுதவிர, இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும். வர்த்தக ரீதியான தடைகளையும் ஒத்த நாடுகளுடன் பேசி விதிக்க வேண்டும். இலங்கையில் இடம்பெயர்ந்து முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்கே செல்ல வாழும் வரை, இலங்கையில் உள்ள சிங்கள பிரஜைகளுக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டும் அதுவரை இந்த பொருளாதார தடை நீடிக்க வேண்டும்.

12 வயது பாலச்சந்திரன் கொல்லப்பட்டது மிகப்பெரிய போர்க்குற்றம். போர்க்குற்றம் நிகழ்த்தியவர்களை சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தி அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என்றார்.




Thanks : Uthayan 

 

கருத்துகள் இல்லை: