செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

Thiru V.K 'தமிழ்த் தென்றல்' திரு.வி.க. பிறந்த நாள் 26.8.1883

'தமிழ்த் தென்றல்' திரு.வி.க. பிறந்த நாள் 26.8.1883

ஆங்கிலம் எதற்கு! தமிழ் மொழிக்கு உழைத்திடுவீர்!

பிரித்தானியர் ஆட்சியில் ஆங்கிலவழிக் கல்வி திணிக்கப்பட்ட போது பார்ப்பனர்கள் ஆங்கிலம் படித்து உயர் பதவி பெற்றனர். அதன் வழியில் திராவிட இயக்கமானது தமிழர்களை ஆங்கிலம் படிக்கத் தூண்டியது. திராவிட இயக்கம் கற்பித்த பார்ப்பனரைப் போல பார்த்தொழுகும் பண்பாட்டிற்கு அடிமைப்பட்ட தமிழர்கள் இன்றுவரை ஆங்கில மோகத்திலிருந்து விடுபட மறுக்கின்றனர்.

உலகமயத்தை ஏற்றுச்செயல்படும் இன்றைய இந்திய வல்லரசுக் கொள்கையாலும் இந்திக்கும், ஆங்கிலத்திற்கும் ஏற்றமேயொழிய தமிழுக்கு இல்லை. தமிழ் தொடர்ந்து புறக்கணிப்படும் இழிநிலை கண்டு 1918ஆம் ஆண்டு முதலே தமிழ்த்தென்றல் திரு.வி.க. வேதனை அடைந்தார். அவர் நவசக்தி ஏட்டில் எழுதிய கீழ்க்கண்ட கட்டுரை இன்றும் தமிழருக்கு பொருத்தப்பாடாக உள்ளது. அது பின்வருமாறு:

"மனிதர்களுக்கு இருக்க வேண்டிய பொதுக்குணங்கள் பல. அவைகளுள் ஒன்று அபிமானமென்பது. அவை தேசாபிமானம், பாஷாபிமானம், சமயாபிமானம் என்பன. எவனிடத்தில் பாஷாபிமானம் உரம் பெற்று நிற்கிறதோ அவனிடத்து ஏனைய ஈரபிமானமும் நிலைபெற்று விளங்கும். பாஷை வளர்ச்சியே தேச வளர்ச்சிக்கும் சமய வளர்ச்சிக்கும் மூலமாயிருப்பது. ஆங்கில பாஷை இங்கிலாந்துக்கு உரியது. அம்மொழி எங்கெங்கே பரவி நிற்கின்றதோ அங்கங்கே ஆங்கிலேயர் வழக்க ஒழுக்கங்களும் நிலவி வருகின்றன.

தமிழ்நாட்டு மேதாவிகள் உபந்நியசிக்கும் போது மேல்நாட்டுக் கவிவாணர் உரைகளையே மேற்கோளாக காட்டுகின்றனர். அவர்கள் உள்ளம் ஆங்கிலமயமாக மாறியிருக்கிறது. நடை, உடை, பாவனை அங்ஙனே மாறுகின்றன. இவைகட்குக் காரணம் யாது? ஆங்கில மொழிப்பயிற்சியால் அவர்தம் உட்கரணங்கள் யாவும் அம் மொழியில் தோய்ந்து விடுவதேயாம். இதனால் மனிதன் வழக்க ஒழுக்கங்களை மாற்றும் ஆற்றல் மொழிகளுக்கு உண்டு என்பது நன்கு விளங்கும்.

நாம் தமிழகத்தாராலின், தமிழ் மொழியின் வளர்ச்சியைப் பற்றி யோசித்தல் வேண்டும். தமிழில் உயரிய நூல்கள் பல இருக்கின்றன. இப்போது திருவள்ளுவரைப் படிப்பவர் யார்? தொல் காப்பியத்தைத் தொடுப்பவர் யார்? சிலப்பதிகாரத்தை சிந்திப்பவர் யார்? மணிமேகலையை மதிப்போர் யார்? பத்துப் பாட்டை படிப்போர் யார்? யாருமில்லையே? பண்டைக் காலத்தில் தமிழ் மக்களிடையில் சாதி வேற்றுமை பரவினதில்லை. 'பிறப்பொக்கும் எல்லா உயிருக்குஞ்' என்னும் வாய் மொழியை உற்று நோக்க. வயிற்றின் கொடுமைக்காக ஜனங்கள் ஆங்கில மொழியைப் பயில வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டார் தமிழை மறந்தார்கள். ஆங்கிலமயமாக விளங்குகிறார்கள். அதனால் தேச வழக்க ஒழுக்கங்களும் தேசாபிமானமும் அற்றுப் போகின்றன. பண்டைத் தமிழர் வழக்க ஒழுக்கங்கள் நிலவ வேண்டுமாயின் முதலாவது தமிழ்மொழி வளர்ச்சிக்கு உழைத்தல் வேண்டும். இப்பொழுது தமிழர்கள் செய்ய வேண்டிய கடமை என்ன? உத்தியோக சாலைகளிலும், சட்ட நிருவாக சபைகளிலும் தமிழே வழங்கப்பட வேண்டுமென்பது நமது கோரிக்கை. தமிழ்ச் சகோதரர்களே! தமிழ்மொழியிலேயே அரசியல் முறைகள் நடைபெற வேண்டிய வழிகளைத் தேடுங்கள். தமிழ்த் தாயின் நலத்தை நாடோறுங் கோரி இறைவனை வழிபடுங்கள்.
-திரு.வி.க.

(1918ஆம் ஆண்டில் திரு.வி.க. அவர்கள் 'தேசபக்தன்' ஏட்டில் தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்த கட்டுரைச் சுருக்கம்)

நன்றி - கதிர் நிலவன், தூய தமிழ்ச்சொற்கள்

இலவம் - iLavam - The Brand of Nation

கருத்துகள் இல்லை: