திங்கள், 3 பிப்ரவரி, 2014

பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி:




பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தலை சந்திக்கும் ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக உள்ளன.

பல்வேறு கட்சிகளும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்திய கம்யூனிஸ்டு கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளது என்று நேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார்.

கூட்டணி தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின்
பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத் இன்று முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அ.தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சேர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.

அப்போது, அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் யார் பிரதமர் வேட்பாளர் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஜெயலலிதா, தேர்தலுக்கு பின்னர் தீர்மானிக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும், யார் யாருக்கு  எத்தனை தொகுதி என பேசப்படவில்லை அடுத்த சந்திப்பின்போது இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: