ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

தமிழ் அறிஞர்கள் அறிவோம்: தனிநாயகம் அடிகளார்


Thanks Dinamani 
 

ஈழத்துத் தமிழறிஞர், கல்வியாளர். தமிழ், ஆங்கிலம் தவிர எசுப்பானியம், உரோம மொழி, போர்த்துகீசியம், பிரெஞ்சு முதலிய மொழிகளில் சரளமாக உரையாடவும் சொற்பொழிவாற்றவும் கூடியவரும், பல ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்து அங்குள்ள நூலகங்களில் பல தமிழ்க் கையெழுத்துப்பிரதி நூல்கள், மற்றும் அச்சிடப்பெற்ற தமிழ் நூல்கள் பற்றி ஆராய்ந்து வெளிக் கொணர்ந்தவர் தனிநாயகம் அடிகளார்.
தனிநாயகம் அடிகளாரின் பெயரைக் கேட்கின்றபோதெல்லாம் நமக்கு நினைவில் வருவது தமிழ்க்கலாசாரம் என்னும் முத்திங்கள் ஏடும் 1968ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற இரண்டாவது தமிழ் ஆராய்ச்சி மாநாடுமே என்பதில் ஐயமில்லை. தமிழ்க் கலாசாரம் என்னும் தீன் சுவையை அந்நிய மொழியாகிய ஆங்கில மொழிமூலம் தமிழர்களது கலை இலக்கியம் பண்பாடு என்பவற்றை உலகிற்கு பறைசாற்றியவர் பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்து ஒரு பன்மொழிப் புலவராகத் திகழ்ந்து வந்த அறிஞர் தனிநாயகம் அடிகளார். பிறப்பு: சேவியர் தனிநாயகம் அடிகளார் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில், ஊர்காவற்துறையில் கரம்பொன் என்ற கிராமத்தில் நாகநாதன் ஹென்றி ஸ்ரனிசுலாசு - சிசிலியா இராசம்மா பல்தியாம்பிள்ளை ஆகியோருக்குப் பிறந்தார். தனிநாயக அடிகளின் இயற்பெயர் சேவியர் நிக்கலஸ் ஸ்ரனிசுலாசு என்பதாகும். பிற்காலத்தே இவர் தமிழில் கொண்ட தீராத காதலினால் உரோமன் கத்தோலிக்க குருவாக நியமிக்கப்பட்டபோது தனது பெயரினை சேவியர் எஸ் தனிநாயகம் என்ற தமிழ்ப் பெயரினையும் சேர்த்துக் கொண்டார். கல்வி: தனிநாயகம் அடிகளார் தொடக்கக் கல்வியை ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியிலும், இடைநிலைக்கல்வியை 1920 முதல் 1922 வரை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி்யிலும் ஆங்கில வழிக் கல்வி பயின்றார். பின்னர் 1931 முதல் 1934 வரை கொழும்பில் புனித பேர்னாட் மறைப்பள்ளியில் சேர்ந்து இறையியல் கல்வி பயின்றார். இக்காலத்தில் ஆங்கிலம், இலத்தின், இத்தாலியம், பிரெஞ்சு, செருமன், எசுப்பானியம், போத்துக்கீயம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். தொடர்ந்து உருசியம், கிரேக்கம், இபுரு, சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்து ஒரு பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தார். திருவனந்தபுரம் மறைமாவட்டத்தில் பணியாற்றிய போது 1934 தொடக்கம் 1939 வரை உரோமை நகரில் வத்திக்கான் பல்கலைக்கழகம் சென்று The Carthaginian Clergy என்ற தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக்கட்டுரையினை எழுதி தெய்வ தத்துவத்தில் (Doctor of Divinity) பட்டம் பெற்றார். இவ்வாய்வுக் கட்டுரை 1960இல் நூல் வடிவில் வெளியானது. இங்கு படிக்கும்போதே பன்நாட்டு அறிஞர்களின் தொடர்புகள் இவருக்கு கிடைத்தது. குருத்துவக் கல்வியை முடித்து அதில் பட்டம் பெற்ற பின்பு தென்னிந்தியா திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்கன்குளம் என்னும் ஊரில் உள்ள புனித திரேசா மடப் பாடசாலையில் நான்காண்டுகள் துணைத் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். முறையான தமிழைக் கற்கவேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இங்கேயே தோன்றியது. பண்டிதர் குருசாமி சுப்பிரமணிய ஐயர் என்பவரிடம் தமிழ் பயில ஆரம்பித்தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ் இலக்கியம் படித்தார். சங்க இலக்கியம் பற்றி ஆய்வு செய்து முதுமாணிப் பட்டம் பெற்றார். 1945ஆம் ஆண்டு தமிழ் இலக்கியத்தில் பட்டப்படிப்பிற்காக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ் இலக்கியம் படித்தார். இவரது தமிழ் அறிவின் ஆழத்தினையும் முதிர்ச்சியினையும் கண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் இரத்தினசாமி, மற்றும் பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரும் எடுத்த முடிவினால் இளமாணிப் படிப்பு முடிக்காமலே நேரடியாக முதுகலைமாணிப் படிப்பினை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார். அங்கு சங்க இலக்கியம் பற்றி ஆய்வு செய்து முதுகலைக் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். 1947 தொடக்கம் 1949 வரை தமிழ் இலக்கிலயத்தில் சங்ககால இலக்கியச் செய்யுளில் இயற்கை என்னும் தலைப்பில் தனது ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து, எம்.லிட். பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். இதில் இவர் செய்த முதல் தமிழ் ஆய்வே இவரை ஆய்வுத்துறைக்கு இட்டுச்சென்று உலகத் தமிழாய்வு வரை கொண்டு சென்றது. ஆசிரியப் பணி: 1952 தொடக்கம் 1961 வரை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியலில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலத்தில் 1955 முதல் 1957 வரை இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் வழியாகக் கல்வியியல் என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து கல்வியியலில் முனைவர் பட்டத்தினை இரண்டாவது முறையாகப் பெற்றுக் கொண்டார். 1961 முதல் 1968ஆம் ஆண்டுவரை மலேசியாவில் உள்ள மலாய் பல்கலைக்கழகத்தில் இந்தியத் துறையின் தலைவராகவும் தமிழ்த் துறையின் பீடாதிபதியாகவும் தமிழ் பேராசிரியாராகவும் பணியாற்றினார். இக்காலத்திலேயே பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்களும் இங்கு பேராசியரியராகக் கடமையாற்றினார். 1969 இல் மலேசியாவை விட்டு நீங்கியவுடன் பாரிசு மற்றும் நேப்பிள்ஸ் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றினார். இதழியலில் பணி: தூத்துக்குடியில் பணியாற்றிய காலத்தில் தனிநாயகம் அடிகளார் தமிழ் இலக்கியக் கழகம் என்ற அமைப்பினை நிறுவி 1952 ஆம் ஆண்டில் Tamil Culture (தமிழ்க் கலாச்சாரம்) என்னும் ஆங்கிலக் காலாண்டு இதழை ஆரம்பித்து தமிழர்களுடைய கலை, இலக்கியம், பண்பாடு என்பவற்றை பறைசாற்றி வந்துள்ளது. கத்தொலிக்க துறவியாக தனது பணியை ஆரம்பித்த தனிநாயகம் அடிகள் காலப்போக்கில் தமிழ் மீது தீராக் காதல் கொண்டு அதனை முறைப்படி கற்றுத் தேர்ந்து ஒரு தமிழ் வளர்க்கும் பரப்பும் தூதராகவும் தமிழ்க் கலாசாரம் ஏட்டின் ஆசிரியராக 1951-1959 வரை இருந்தார். இந்த ஏடு ஆற்றிவந்த அரும் பெரும் பணி மிகவும் மகத்தானது. இவ்விதழ் அமெரிக்க, ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள் வரை சென்றடைந்த பெருமை தனிநாய்கம் அடிகளாரையே சாரும். இதன் காரணமாக தமிழ் கற்கும் வேற்று மொழி இனத்தவர்களான சுவெலபில், பிளியோசற், அந்திரோனொவ், எமனு, குய்ப்பர், நோல்டென், மார், பொக்சர், பறோ ஆகியோர் இவ்விதழில் தொடர்ந்து தமது ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வந்தனர். 1961 இல் சென்னையில் "தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்" (Academy of Tamil Culture) என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். முதல் தமிழாராச்சி மகாநாட்டினைத் தொடர்ந்து மலேசியாவிலிருந்து உலகத் தமிழ் ஆய்வு மையத்தின் சார்பாக "Journal of Tamil Studies" என்னும் ஒரு இதழுக்கான ஆசிரியராக சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றி பல சிறந்த அறிஞர்களின் கட்டுரைகளை வெளிக் கொணர்ந்தார். உலக நாடுகளுக்குப் பயணம்: 1950களில் தனிநாயகம் அடிகளாரால் லிசுபனில் அச்சிடப்பட்ட லூசோ-தமிழ் மறைக்கல்வி (Cartilha) நூல், 1554 ஆம் ஆண்டில் லிசுபனில் அச்சிடப்பட்ட லூசோ-தமிழ் மறைக்கல்வி (Cartilha)நூல் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ் மொழியையும் அதன் இலக்கியச் செழுமையையும் உலகில் பரப்பும் நோக்கோடு ஜப்பான், சிலி, பிரேசில், பெரு, மெக்சிக்கோ, எக்குவடோர், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து ஒரே வருடத்தில் 200க்கும் மேற்பட்ட பேருரைகளை நிகழ்த்தி சாதனை புரிந்தார். இவ்வாறு விரிவுரைகளை நிகழ்த்தும் போது பல நாடுகளிலும் சிறப்பு பேராசிரியராகத் தமிழ்ப்பாடமும் நடத்தி வந்துள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்தபோது அங்குள்ள நூலகங்களில் பல தமிழ்க் கையெழுத்துப்பிரதி நூல்கள், மற்றும் அச்சிடப்பெற்ற தமிழ் நூல்கள் பற்றி ஆராய்ந்தார். இதன் பெறுபேறாக 1556 ஆம் ஆண்டில் தமிழில் அச்சிடப்பெற்ற Luso-Tamil Catechism (போர்த்துக்கீச-தமிழ் மொழியில் கிறித்தவம் சார்ந்த கேள்விக் கொத்து) "காட்டில்கா" (Cartilha) எனப் பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதனை அடிகளார் 1950 ஆம் ஆண்டில் லிஸ்பனில் கண்டெடுத்தார். அத்துடன், 1578 இல் அச்சிடப்பெற்ற தம்பிரான் வணக்கம் (Thambiran Vanakkam), 1579 இல் வெளியிடப்பட்ட "கிறித்தியானி வணக்கம்" (Kiristiani Vanakkam). முதன் முதலாக அன்ரம் டீ பெறோனீக்கா என்பவரால் தொகுக்கப்பட்ட தமிழ் - போர்த்துக்கீச மொழி அகராதி போன்றவற்றையும் கண்டெடுத்தார். அதில் பெறொனிக்கா அகராதியினை மீள்பதிப்பு செய்து அதனை முதல் தமிழாராச்சி மகாநாட்டில் மலேசியாவில் வெளியிட்டார். தனிநாயகம் அடிகளார் போர்த்துகலில் கண்டறிந்த Arte da Lingua Malabar என்ற கையேடே தமிழுக்காக அயலவர் எழுதிய முதல் இலக்கணக் கையேடு ஆகும். தாளில் எழுதப்பட்ட இந்தக் கையேடு என்றீக்கு அடிகளால் 1549-இல் வழங்கிய போர்த்துக்கீசிய மொழியில் அக்காலத்துத் தமிழ் மொழியை விளக்குகிறது. இந்தக் கையேட்டை ஜீன் ஹைன் (Jeanne Hein) என்ற அமெரிக்கர் 2013 ஏப்ரலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். தாய்லாந்தில் திருவெம்பாவை: தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் பாடும் பாடல் திருவாசகத்திலுள்ள திருவெம்பாவையிலிருந்து எடுக்கப்பட்டவை என்பதை உலகுக்கு அறிவித்தார். 1954-ம் ஆண்டு தாய்லாந்து சென்ற போது அங்கு பாடப்பட்ட பாடல் இது. “ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாந்தடய்கண் மாதே வளருதியோ வன்சேவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதியாய்க் கேட்டாலுமே விம்மி விம்மி மெய்மறந்து…” இப்பாடல்களை அடிகளார்க்குப் படித்துக் காட்டிய தாய்லாந்து நாட்டு அரச குரு தாய்லாந்து மொழியிலும் கிரந்தந்திலும் எழுதப்பட்டிருந்த சில ஏடுகளையும் காட்டினார். தாய்லாந்தில் பின்பற்றப்பட்ட இந்து சமயமும், புத்த சமயமும் இந்தியாவிலிருந்து சென்றவைகள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தாய்லாந்து நாட்டிற்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்பினை முதன் முதலில் அறிந்து தெரிவித்தவர் தனிநாயகம் அடிகளாரே ஆவார். மலாயாவையும் தாய்லாந்தையும் இணைக்கும் நீண்ட குறுகிய இடப்பரப்பில் அமைந்துள்ள ‘தாக்குவப்பா’ என்னும் இடமே சிலப்பதிகாரம் காட்டும் ‘தக்கோலம்’ என்பது அடிகளாரின் கண்டுபிடிப்பு. மேலும் அம்மாவட்டத்தில் மணிக் கிராமத்தார் பற்றிய கல்வெட்டொன்று கண்டுபிடிக்கப்பட்டதும், அங்குள்ள இடப்பெயர்களும் சிவபெருமானின் பழைய சிலையும் தமிழ் கலைத் தொடர்பைக் காட்டுவதும் அடிகளாரின் கருத்துக்கு வலு சேர்க்கின்றன. தமிழாராய்ச்சி நிறுவனம் தோற்றுவிப்பு: 1963-ல் எம்.பக்தவத்சலம் தமிழக முதல்வராக இருந்தபோது தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகத்தில் தனிநாயகம் அடிகளார் உலக நாடுகளில் உள்ள தமிழறிஞர்கள் யாவரையும் ஒன்று திரட்டி ஒரு குழுவாக அமைத்து தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் தமிழாராய்ச்சி மகாநாட்டினை நடத்தும் யோசனையை முன்வைத்தார். இதற்கான ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையினையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. இதனையடுத்து அம்மாநாட்டினைத் தாமே முன்னின்று உலகயளவிலேயே நடத்த வேண்டும் என்ற உத்வேகம் கொண்டதனால் உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகம் உருவாக வழி பிறந்தது. உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தின் (International Association for Tami Research, IATR) முதல் கூட்டம் திலிலியில் 1964 ஜனவரியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தனிநாயகம் அடிகளாருடன், பேராசிரியர் கமில் சுவெலபில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வ.ஐ. சுப்பிரமணியம் ஆகியோர் அழைப்பாளர்களாக இருந்து செயற்பட்டனர். மொத்தம் 26 தமிழறிஞர்கள் சேர்ந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை 1964 ஜனவரி மாதம் 7 ஆம் தேதி தொடங்கி வைத்தனர். அந்த அமைப்பின் முதல் தலைவராக பிரான்சு நாட்டுத்தமிழறி]ர் பேராசிரியர் ஜேன் ஃபிலியோசா தலைவராகவும், ஒக்ஸ்போட் பல்கலைக்கழக பேராசிரியர் தொமஸ் பிரோ, அமெரிக்க நாட்டு பேராசிரியர் எமனோ, பன்மொழிப் புலவர் பேராசிரியர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், மு. வரதராசன் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும் செக்கோசெலவாக்கியா, பிராக் கல்கலைக்கழக பேராசிரியர் கமில் சுவெலபில், தனிநாயகம் அடிகள் ஆகியோர் இணைச்செயலாளர்களாகவும் தேர்வு செய்யப்பட்டார்கள். முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தொடர்ச்சியாக எட்டு உலகத் தமிழாராய்ச்சி மகாநாடுகளை பல உலக நாடுகளில் நடத்தியது. அடிகளார் உயிருடன் இருந்த காலப்பகுதியில் நான்கு மாநாடுகள் நடைபெற்றன. இவர் பொதுச் செயலாளராக இருந்தபோது மலேசிய அரசின் துணையோடு பிரம்மாண்டமான முறையில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 - 23 தேதிகளில் முதல் மகாநாட்டினை நடத்தினார். 1961 ஆண்டில் அவர் மலாய் பல்கலைக் கழகத்தில் இந்தியத் துறைத் தலைவராகவும் தமிழ் பேராசிரியராகவும் பணியாற்றியது மிகவும் துணைநின்றது. அப்போது அமைச்சர்களாக இருந்த வி. தி. சம்பந்தன், வி. மாணிக்கவாசகம் ஆகியோருடன் அடிகளார் பேணிய நல்லுறவால் மலேசிய அரசின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்றது. மாநாட்டிற்கு மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். தமிழக முதல்வர் எம். பக்தவத்சலமும் கலந்து சிறப்பித்தார். புரொயென்காவின் போர்த்துக்கீச-தமிழ் அகராதியை அங்கு மீள்பதிவாக்கம் செய்து இம்மாநாட்டில் தனிநாயகம் அடிகளார் வெளியிட்டார். தமிழ்பணி செய்யவே இறைவன் தன்னை அழைக்கின்றான் என்று உறுதியாக நம்பிய அடிகளார்… “என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே” என்னும் திருமூலரின் வரிகளைச் சொல்லி தம் உரையை முடிப்பார் அடிகளார் முதல் உலகத் தமிழ் மாநாட்டின் முதல் அமர்வுக்கு அவர் தலைமை தாங்கிய போது மேற்கூறிய வரிகளைக் கூறிய பின்னரே ஆங்கிலத்தில் தம் உரையைத் தொடர்ந்தார். இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: 1966-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாவது தமிழாராய்ச்சி மாநாட்டின் முதன்மை விருந்தினராக தனிநாயகம் அடிகளார் கலந்து கொண்டமை இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு பெருமையைத் தோற்றுவித்தது. 1970 ஆம் ஆண்டு ஜீலை 15-18 தேதிகளில் பிரான்சு நாட்டு தலைநகர் பாரீஸில் நடைபெற்றது. 1974-ஆம் ஆண்டு ஜனவரி 3 - 9 தேதிகளில் யாழ்பாணத்தில் நான்காம் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது. அவ்வரங்குகளில் அடிகளார் சுறுசுறுப்பாகவும் விவேகமாகவும் செயற்பட்டு மாநாட்டின் முன்னோடியாகவும் திகழ்ந்தமையைப் பல வட்டாரங்களிலிருந்து கிடைத்த புகழாரங்கள் சான்று பகரும். இன்று ‘செம்மொழி மாநாடு’ என்ற பெயரில் அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே உலக தமிழ் மாநாட்டைக் கூட்டும் அரசியல் கட்சியினருக்கு மத்தியில் அடிகளார் தமிழை வளர்ப்பதற்காக இதுபோன்ற மாநாடுகளை நடத்தினார். ஆய்வு நூல்கள்: தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களும் எழுதி வெளியிட்டார். தமிழ்த் தூது (1952) என்ற நூல் அடங்கலாக மொத்தம் 137 நூல்களை எழுதினார். அடிகாளார் எழுதிய இலக்கியக் கட்டுரைகளின் முதல் தொகுப்பு "தமிழ்த் தூது" என்பதாகும். இது 1952 ல் வெளியிடப்பட்டது. அவரது உலகப் பயணங்களின் அனுபவங்கள் "ஒரே உலகம்" என்ற தலைப்பில் 1963ஆம் ஆண்டு வெளியிட்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அடிகளார் ஆற்றிய தொடர்ச் சொற்பொழிவு “திருவள்ளுவர்” என்ற மகுடமிடப்பெற்று 1967ல் நூலாக வெளிவந்தது. அடிகளார் எழுதிய 30 ஆய்வுக்கட்டுரைகள் தமிழ் காலாசரம் சஞ்சிகையில் வெளிவந்த 70 கட்டுரைகள் பலவேறு இதழ்களிலும் கருத்தரங்க மலர்களிலும் வெளிவந்துள்ளன. தமிழைப் பற்றிய ஐரோப்பிய மொழிகளில் வெளி வந்த நூல்களைத் தொகுப்பதன் மூலம் பன்னாட்டு ரீதியில் தமிழ்மொழியை உலகின் கவனத்திற்குக் கொண்டுவர முயன்றார். "Reference Guide to Tamil Studies" என்ற 122 பக்கங்களைக் கொண்ட உசாத்துணை நூலில் 1335 நூல்களைப் பற்றிய குறிப்புக்களைச் சேர்த்து நூலாக வெளியிட்டுள்ளார். இந்நூல் இலத்தின், பிரெஞ்சு, ஜெர்மனி, உருசியம், மலாய், ஆங்கிலம் போன்ற மொழிகளில் தமிழியல் பற்றி வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் ஒரு தொகுப்பு நூலாக விளங்கிற்று. தமிழாய்வில் ஈடுபட விரும்பும் வெளிநாட்டவருக்கு ஒரு உசாத்துணை நூலாக விளங்கவே இதனை வெளியிட்டார். திருவள்ளுவரை கிரேக்கத் தத்துவ ஞானிகளான பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோருடன் ஒப்பிட்டுக்காட்டி வள்ளுவம் மேற்கத்திய தத்துவங்களைக் காட்டிலும் மேலோங்கி நிற்பதை சான்றுகள் மூலம் விளக்கினார். சமஸ்கிருதம், பாலி மொழி இலக்கியங்கள் பெரும்பாலும் சமயப்பின்னணியில் எழுதப்பட்டவைகளே. ஆனால், பழந்தமிழ் இலக்கியங்கள் மட்டுமே சமய சார்பற்று தனித்து விளங்கியதையும், இதன் மூலமாகவே தமிழ் இலக்கியம் வேறு எந்த மொழிக்கும் கடன்பட்டதில்லை என்பதையும் இந்த உலகிற்கு ஆய்வுகள் மூலம் விளக்கினார். இலங்கையிலிருந்து வெளியான சைமன் காசிச்செட்டி ஆங்கிலத்தில் எழுதிய தமிழ் புளூட்டார்க் என்ற நூலை பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரைக் கொண்டு கூடுதல் செய்திகளைச் சேர்த்து பிழை களைந்து வெளியிட ஏற்பாடு செய்தார். மறைவு: அறிவாளியாகவும், ஆன்மீகவாதியாகவும். செயல் வீரனாகவும். உலகில் உள்ள தமிழர்களை, தமிழறிஞர்களையும் ஒன்று இணைத்த மாவீரன். பக்திச்சுவையும் மனிதாபிமானமும், பரந்தநோக்கும், தமிழிலுள்ள ஏனைய சிறப்புகள் என்றும் குறிப்பாக தேவார, திருவாசகங்களிலும் ஆழ்வார்களின் திருப்பாடல்களிலும் பொதிந்தும் மலிந்தும் கிடக்கும் பக்தியுணர்வை நாம் வேறெங்கும் காணமுடியாத பண்டமாக. தமிழ் இனத்தின் விடிவெள்ளியாகவும் திகழந்த அடிகளார் 1980 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் உயிர் நீத்தார். அடிகளார் இறப்பதற்கு நான்கு மாதத்திற்கு முன்னர் ஏப்ரல் 1980 இல் தந்தை செல்வா நினைவுப் பேருரையை கொழும்பில் நிகழ்த்தினார். அதே ஆண்டு மே மாதம் வேலணையில் பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்கள் எழுதிய தமிழ்மறை விருந்து என்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார் அவரது இறுதி விழாவாகும். கௌரவம்: * 1981 இல் மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவரது சிலை ஒன்றும் அன்றைய தமிழகக் கல்வியமைச்சர் அரங்கநாயகம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. * 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனிநாயக அடிகளின் தமிழ்ச் சேவையினை நினைவு கூர்ந்து பேராசிரியர் சு. வித்தியானந்தன் துணைவேந்தராகப் பணியாற்றியபோது அவருக்கு இறப்புக்குப் பின்னரான கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது. * நெடுந்தீவு மக்கள் தமது மண்ணின் மைந்தனாகிய தனிநாயகம் அடிகளுக்கு ஆளுயர சிலை அமைத்துள்ளனர். * சென்னையில் 2013 பெப்ரவரி 16 அன்று தனிநாயக அடிகளாரின் நினைவை போற்றும் வகையில் நூற்றாண்டு தொடக்க விழா நடைபெற்றது. அடிகளாரால் எழுதப்பட்ட சில நூல்களின் விவரங்கள் வருமாறு: * The Carthaginian Clergy * Nature in the ancient Poetry * Aspects of Tami Humanism * Indian thought and Roman Stoicism * Educational thoughts in ancient Tamil Literature * தமிழர் பண்பாடு நேற்றும் இன்றும் நாளையும். * தமிழ்த்தூது * ஒரே உலகம் * திருவள்ளுவர் * உலக ஒழுக்கவியலில் திருக்குறள். * Reference guide to Tamil studies * Tamil Studies Abroad * Tamil Culture and Civilization தமிழர்கள் தமிழீழத்திலே கொத்துக் கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டபோது நாம் அனைவரும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது அரசியல் இயலாமையால் மட்டுமல்ல, மாறாக தமிழினம் மொழிப்பற்று, தாய்மொழியில் கல்வி பயிலாமல், தமிழ்மொழியில் பேசவும், எழுதவும், சிந்திக்கவும் மறந்துபோனதன் விளைவேயாகும். ஓர் இனத்தை அழிக்க வேண்டுமென்றால் முதலில் அவ்வினத்தின் மொழியை அழித்துவிடுங்கள் இனம் தானாக அழிந்துவிடும்” என்பார் அறிஞர் இங்கர்சால். மொழிப்பற்றும், மொழி உணர்வும் இருக்கும் நாட்டில்தான் அறிஞர்கள் போற்றப்படுவார்கள், மதிக்கப்படுவார்கள். அறிஞர்களும், ஆய்வாளர்களும் மதிப்போடும், மாண்போடும் சுதந்திரத்தோடும் வாழும் நாட்டில்தான் நல்ல பல இலக்கியங்கள் உருவாகும். தனிநாயகம் அடிகாளர் போன்று தமிழர்கள் மறந்துபோன தமிழ் அறிஞர்கள் ஏராளம். தலைமை வழிபாடு என்பது தமிழினத்தின் சாபக்கேடுகளில் ஒன்று. திரைப்பட நடிகை நடிகர்களுக்காக கொடிபிடிக்கும் ரசிகர்கள் கூட்டத்தில் ஒரு விழுக்காடு தமிழ் அறிஞர்கள் பின் சென்றிருப்பின் தமிழ் இனம், மொழி இன்று உலக அரங்கில் உயர்ந்து நின்றிருக்கும். நாம் மறந்தவைகள் ஏராளம். நமக்கு மறைக்கப்பட்ட வரலாறுகளும் எண்ணிலடங்கா. தமிழர்கள் மறந்துபோன ஒரு தமிழ் அறிஞரின் நூற்றாண்டு நினைவு நாளை நாம் கொண்டாடியாக வேண்டும். தமிழ் மொழியை உலக அரங்கில் உயர்த்தி, பிற மொழிகளுக்கு இணையான இலக்கண இலக்கியங்களை தமிழ் மொழி தன்னகத்தே கொண்டுள்ளது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தவர் தனிநாயகம் அடிகளார். தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது தமிழகம் உணர்வற்று சடலமாக வாழ்ததற்கு காரணம் நம்மிடையே தமிழர் என்ற இன மொழி உணர்வு இல்லாமற்போனதே மொழி உணர்வே இல்லாத போது எப்படி மொழிக்காகப் பாடுபட்ட அறிஞர்களை நாம் நினைவில் கொள்வோம்? மொழி பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் அம்மொழிக்காக அயராது உழைத்த ஆன்றோர்களையும், சான்றோர்களையும் நினைவில் கூற வேண்டும். ------------------------- Thanks : Dinamani

கருத்துகள் இல்லை: