செவ்வாய், 2 டிசம்பர், 2014

Vaiko BJP DMK வைகோ மீது பா.ஜ.க. தலைவர்கள் தாக்குதல் : கருணாநிதி கண்டனம்

பிரதமர் மோடிக்கு எதிராக கருத்துத் தெரிவித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை பா.ஜ.க. தலைவர்கள் தாக்கிப் பேசுவதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த வாரம் நேபாள நாட்டில் சார்க் மாநாடு நடைபெற்றபோது,  பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை அதிபர் ராஜபக்சவும் சந்தித்துக் கொண்ட நேரத்தில், இலங்கையில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ச மீண்டும் வெற்றி பெற  மோடி வாழ்த்து தெரிவித்தார். தமிழர்கள் பலரின் படுகொலைக்குக் காரணமான ராஜபக்ச மீண்டும் வெற்றி பெற நம்முடைய பிரதமர் வாழ்த்து தெரிவித்ததற்காக, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தார்கள்.

அப்போது மதிமுக வின் பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மோடி தரம் தாழ்ந்து விட்டார், எந்த இந்தியப் பிரதமரும் இவ்வாறு நடந்து கொண்டதில்லை என்ற பொருள்பட கருத்து தெரிவித்ததற்கு, பாஜகவின் மற்ற தலைவர்கள் எல்லாம் பொறுமையாக இருந்த போதிலும், தேசிய செயலாளர் எச். ராஜா, அவருக்கே உரிய பாணியில், மேலும் கடுமையாக வைகோ இவ்வாறு ஒருமையில் பா.ஜ.க. தலைவர்களைப் பேசுவதை நிறுத்தாவிட்டால்,
அவர் நாவை அடக்காவிட்டால், தமிழ்நாட்டில் நடமாட முடியாது, பாதுகாப்பாகத் திரும்ப முடியாது என்றெல்லாம் தேவையில்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தி பதிலளித்திருப்பதற்கு நான் என்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் அவ்வாறு பேசியதைக் கண்டித்து தமிழக கட்சித் தலைவர்கள் பலரும் கண்டன அறிக்கை விடுத்துள்ளனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, தமிழகத்தில் பா.ஜ.க. வுடன் முதலில் கூட்டணி அமைத்த ம.தி.மு.க., தற்போது அந்தக் கூட்டணியிலிருந்து விலகுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.


இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அதிபர் ராஜபக்ச ஆட்சியில் எப்படிப்பட்ட கொடுமைகள் எல்லாம் செய்யப்பட்டன என்ற கோபத்தில் கருத்துகள் தெரிவிக்கப்படுகிற போது, தமிழக பா.ஜ.க. வில் உள்ளவர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்து, அவர்களே பிரதமரிடம் அதுபற்றி எடுத்து தெரிவிக்க வேண்டுமே தவிர, மாறாக தாங்கள் தான் பிரதமருக்கு நேரடி பிரதிநிதி என்பதைப் போலக் கருதிக் கொண்டு, கடுமையான வார்த்தை பிரகடனம் செய்வது நல்லதல்ல என்பதை இனியாவது புரியது கொண்டு, பிரதமரின் செயலுக்கு தமிழகத்திலே எப்படிப்பட்ட எதிர்ப்பு இந்த ஒரு விஷயத்தினால் ஏற்பட்டுள்ளது என்பதை அவரிடமே தெரிவித்து, மேலும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்காமல் பார்த்துக் கொள்வது தான் அந்தக் கட்சிக்கே நலன் பயக்குமே தவிர, கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவது அந்தக் கட்சிக்கும், அந்தக் கட்சியின் தலைமையிலே நடைபெறும் மத்திய ஆட்சிக்கும் நன்மை பயக்காது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்திலே கூட, மத்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக நடந்து கொண்ட போது, அந்தக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தி.மு.க  பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, எவ்வளவோ வேண்டுகோள் விடுத்தும் கேட்காத நிலையில் அந்தக்  கூட்டணியிலிருந்து விலகியதையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி.

கருத்துகள் இல்லை: