வியாழன், 8 ஜனவரி, 2015

இலங்கையில் அதிபர் தேர்தல்: ராஜபக்சே எதிர்ப்பு அலை வீசுகிறது

இலங்கையில் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடக்கிறது. 7–வது அதிபர் தேர்தல் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. தற்போதைய அதிபர் ராஜபக்சே மீண்டும் போட்டியிடுகிறார்.

2005–ம் ஆண்டு முதல் அதிபராக இருக்கும் ராஜபக்சே தற்போது 3–வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். இதற்கு முன் 2010–ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடந்தது. அவரது பதவி காலம் முடிவடைய இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில் முன்கூட்டியே ராஜபக்சே தேர்தலை நடத்துகிறார்.

இலங்கை சட்டப்படி 2 முறைதான் ஒருவர் அதிபர் பதவிக்கு போட்டியிட முடியும். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அனுமதியுடன் அவர் 3–வது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து 16 அரசியல் கட்சி வேட்பாளர்களும், 2 சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

இலங்கை சுதந்திரா கட்சியைச் சேர்ந்த ராஜபக்சே, ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணியின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்த கூட்டணியில் சிலோன் தொழிலாளர் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சி உள்பட 5 சிறிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக மைத்திரிபாலா சிறீசேனா போட்டியிடுகிறார். இவர் ராஜபக்சே மந்திரிசபையில் சுகா தாரத்துறை மந்திரியாகவும் சுதந்திரா கட்சியின் பொதுசெயலாளராகவும் இருந்தார். ராஜபக்சேவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து விலகி எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருக்கு முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பும் சிறிசேனாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இவர்கள் தவிர மற்ற அனைவரும் சிறிய கட்சி வேட்பாளர்கள். இதனால் ராஜபக்சேவுக்கும், சிறீசேனாவுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலில் ராஜபக்சே எதிர்ப்பு அலை கடுமையாக வீசுகிறது. விடுதலைப்புலிகளுடனான போரில் வெற்றி பெற்றதால் கடந்த தேர்தலில் ராஜபக்சே சிங்களர்கள் ஆதரவுடன் எளிதில் வெற்றி பெற்றார். இந்த முறை சிங்களர்கள் பகுதியில் கடும் அதிருப்தியும் எதிர்ப்பும் நிலவுகிறது.

இலங்கையின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1 கோடியே 55 லட்சத்து 40 ஆயிரத்து 480.

இதில்  

சிங்களர்கள் 70 சதவீதம் பேர் ஆகும். 
தமிழர்கள் 11.20 சதவீதம் (இந்து, கிறிஸ்தவர்கள்), 
முஸ்லிம்கள் 9.7 சதவீதம் 
சிங்கள கிறிஸ்தவர்கள் 4.7 சதவீதம் 
ந்திய தமிழர்கள் (மலையக தமிழர்கள்) 4.20 சதவீதம் ஆவார்கள்.

முஸ்லிம்கள் - பெரும்பாலனர் - தமிழ் தாய் மொழி )

தேர்தலை கண்காணிக்க இந்தியா உள்பட தெற்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த 104 பார்வையாளர்கள் வந்துள்ளனர். ஐரோப்பா மற்றும் காமன்வெல்த் நாட்டு பார்வையாளர்களும் சென்றுள்ளனர்.

தேர்தலையொட்டி இலங்கையில் இன்று முதல் 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடல் பகுதியில் இலங்கை கடற்படையின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கில் தமிழர் பகுதியில் ராணுவம் முழுமையாக வாபஸ் பெறப்படாத நிலையில் அங்கு கடும் அதிருப்தி நிலவுகிறது. ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் தமிழர் பகுதியில் வாக்குப்பதிவு சதவீதம் குறையும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: