ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

அண்ணா அறிவாலயத்தில் தி.மு.கவின் டெசோ மாநாடு : : தடைக்கு எதிரான மனுவுக்கு உடனடித் தீர்ப்பு இல்லை




அண்ணா அறிவாலயத்தில் தி.மு.கவின் டெசோ மாநாடு தடைக்கு எதிரான மனுவுக்கு உடனடித் தீர்ப்பு இல்லை news
தி.மு.க.வின் ஏற்பாட்டில் சென்னையில் இன்று நடைபெறவிருந்த டெசோ மாநாட்டுக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில் இந்தத் தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க நேற்று வழக்கு தாக்கல் செய்தது. எனினும் இந்த வழக்குத் தொடர்பில் உடனடியாகத் தீர்ப்பு எதையும் வழங்க முடியாது என்று நீதிபதி போல் வசந்தகுமார் அறிவித்தார்.
 இதனையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை மாநாட்டைச் சென்னையில் உள்ள தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடத்துவதற்குத் தி.மு.க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றத்தில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பால் வசந்தகுமார், இருதரப்பினரையும் சரமாரியாகக் கேள்விகள் கேட்டார். மேலும் இது குறித்த வழக்கு நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கை விசாரிக்க அவர் மறுத்துவிட்டார்.
மாநாட்டுக்கு 2500 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே 8000க்கும் குறைவானவர்களே வருவார்கள் என்று டெசோ மாநாட்டு அமைப்பாளர்கள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
மாநாடு நடத்துவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று உளவுத்துறை தகவல் அளித்துள்ளதாகவும், பயங்கரவாதத் தாக்குதல் ஏதேனும் நடத்தப்படலாம் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அரச சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி பால் வசந்தகுமார், டெசோ மாநாட்டுக்கு 8000க்கும் மேற்பட்டவர்கள் வந்தால் என்ன செய்வீர்கள்? மாநாட்டுக்கு வருபவர்களின் பாதுகாப்புக்கு டெசோ மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்பேற்றுக் கொள்வார்களா? 
டெசோ மாநாட்டுக்கு அனுமதி கோரியவர் ஒருவர்? தற்போது வழக்குத் தொடர்ந்திருப்பவர் வேறொருவரா? இதில் யார் பொறுப்பேற்பது? ஒரு வேளை சில நிபந்தனைகளுடன் பொலிஸ் அனுமதி அளித்தால் அதனை ஏற்றுக் கொள்வீர்களா? என்ன நீதிபதி சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார்.
மேலும், டெசோ மாநாட்டுக்கு வருபவர்களின் பாதுகாப்பு நாங்கள் பொறுப்பு என்று எழுதிக் கொடுத்தால் பொலிஸ் அனுமதி அளிக்குமா எனவும் அவர் அரசிடம் கேட்டார்.
பின்னர், டெசோ மாநாடு குறித்த முக்கிய வழக்கு டிவிஷன் பெஞ்ச் முன்பு இருப்பதால் இந்த வழக்கை தான் விசாரிப்பது சரியாக இருக்காது. இந்த வழக்கு ஆவணங்களையும் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கிறேன் என்று கூறி வழக்கை விசாரிக்க மறுப்புத் தெரிவித்து விட்டார்.
இதனைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது கோபாலாபுரம் வீட்டில் கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். உயர்நீதிமன்றத்தில் அனுமதி கிடைக்காமையால் அண்ணா அறிவாலயத்தின் பின்புறம் உள்ள கலைஞர் அரங்கில் மாநாட்டை நடத்தி முடிக்க தி.மு.க. திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை: