சனி, 1 நவம்பர், 2014

5-ந் தேதி மீனவர்கள் வேலைநிறுத்தம் தமிழகம் முழுவதும் போராட்டம்


  5-ந் தேதி மீனவர்கள் வேலைநிறுத்தம்

தமிழகம் முழுவதும் போராட்டம்

ராமேசுவரம் மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்ததை கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. 5-ந் தேதி ஒருநாள் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

சென்னை, நவ.1-

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது, தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூக்கு தண்டனை

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் அகஸ்டஸ் (வயது 35), எமர்சன்(35), வில்சன் (40), லாங்லெட் (22), பிரசாத் (30) ஆகியோர் கடந்த 28-11-2011 அன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்தபோது, போதைப்பொருள் கடத்தியதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் இலங்கை மீனவர்கள் 3 பேரும் கைது ஆனார்கள்.

இவர்கள் மீதான வழக்கை விசாரித்த கொழும்பு ஐகோர்ட்டு, தமிழக மீனவர்கள் 5 பேருக்கும், இலங்கை மீனவர்கள் 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது.

மீட்க கோரிக்கை

இது தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மீனவர்கள் 5 பேரின் உயிரையும் காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வற்புறுத்தி உள்ளனர். இந்த விவகாரத்தில் தலையிட்டு 5 மீனவர்களையும் மீட்க வேண்டும் என்று கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி இருக்கிறார்.

மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நேற்று முன்தினம் தீர்ப்பு வெளியானதும் ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. ராமேசுவரம்-பாம்பன் சாலையில் மீனவர்கள் ஆங்காங்கே அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சிலர் தண்டவாளங்களை சேதப்படுத்தினர். அரசு பஸ் ஒன்று எரிக்கப்பட்டது. இதனால் பஸ்-ரெயில் போக்குவரத்து அடியோடு முடங்கியது.

கைவிடப்பட்ட மறியல்

நேற்றுமுன்தினம் இரவு வரை போராட்டம் தொடர்ந்தது. போராட்டக்காரர்களுடன் அன்வர்ராஜா எம்.பி. கலெக்டர் நந்தகுமார், போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அளிக்கப்பட்ட உறுதிமொழியை ஏற்று, இரவு 11.45 மணி அளவில் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அதன் பின்னர் தங்கச்சிமடத்தில் இருந்து பாம்பன் வரை சாலையில் போடப்பட்டிருந்த தடைகளை ராமேசுவரம் நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். அதைத்தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் சுற்றுலா வாகனங்கள் இயக்கப்பட்டன. பின்னர் அதிகாலை 4 மணி முதல் போக்குவரத்து தொடங்கியது.

என்றபோதிலும், நேற்று காலையிலும் ராமேசுவரத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவியது. தங்கச்சிமடம், அக்காள்மடம் பகுதிகளில் கடைகள் திறக்கப்படவில்லை. ராமேசுவரத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த சுற்றுலா வேன் மீது திடீரென்று சிலர் கல்வீசி தாக்கினர். இதில் அதன் முன்புற கண்ணாடி உடைந்தது.

மீனவர் சங்க கூட்டம்

இந்த நிலையில், தங்கச்சிமடத்தில் அனைத்து மீனவர் சங்க கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஜவாருல்லா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசுகையில், தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் இதுதொடர்பாக இன்னும் ஒரு வாரத்தில் இலங்கை சென்று அந்த நாட்டின் சட்ட மந்திரியையும், மீனவர்களுக்காக வாதாடிய வக்கீல்களையும் சந்தித்து பேச இருப்பதாகவும் தெரிவித்தார்.

ராமேசுவரம், பாம்பன் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கி உள்ளனர். சுமார் 6 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. தங்கச்சிமடம், பாம்பன் மீனவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பவில்லை.

மீனவர்களுக்கு ஆதரவாக, ராமேசுவரம் வக்கீல்களும் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

5-ந் தேதி மீனவர்கள் வேலைநிறுத்தம்

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட மீனவ பிரதிநிதிகளின் அவரச ஆலோசனை கூட்டம் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இந்திய மீனவர் சங்க மாநில தலைவர் எம்.டி.தயாளன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எம்.டி.தயாளன், பின்னர் ‘‘தினத்தந்தி’’ நிருபரிடம் கூறியதாவது:-

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ள இலங்கை அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள 13 கடலோர மாவட்டங்களில் வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும். மேலும் அன்றைய தினம் தமிழகம் முழுவதும் உள்ள 591 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்களின் வீடுகள், படகுகளில் கருப்புக்கொடி ஏற்றப்படும். ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மறியல் போன்ற போராட்டங்களும் நடத்தப்படும். சென்னையில் காசிமேடு துறைமுகத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தமிழக மீனவர்களின் உயிரை காப்பாற்றி, அவர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு எம்.டி.தயாளன் கூறினார்.

சென்னையில் 300 பேர் கைது

தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்தும், இலங்கை துணை தூதரகத்தை அகற்ற கோரியும் சென்னையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினர் 300 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

திருச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வக்கீல் பிரபு தலைமையில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 25 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவபொம்மையை எரிக்க முயன்ற புதிய தமிழகம் கட்சியினர் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சை, கும்பகோணத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணத்தில் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியினர் ராஜபக்சே உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

சேலத்தில் தள்ளுமுள்ளு

சேலத்தில் தலைமை தபால் நிலையம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ராஜபக்சே உருவபொம்மையை எரிக்க முயன்றபோது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தர்மபுரி தபால் நிலையம் முன்பும், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்திலும், மற்றும் வேலூர், கடலூர், சிதம்பரம், விருத்தாசலத்திலும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் ராஜபக்சேவின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் போராட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ராஜபக்சேவின் உருவபொம்மையை எரித்தனர்.

கோவை

கோவையில் செஞ்சிலுவை சங்கம் முன் ராஜபக்சேவின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் ரெயில் நிலையம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது ராஜபக்சேவின் உருவபொம்மையை எரிக்க முயன்ற 18 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை பாளையங்கோட்டையில் ராஜபக்சேவின் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்திய 15 பேரை போலீசார் கைது செய்தனர். நாகர்கோவிலிலும் ராஜபக்சே உருவபொம்மை எரிக்கப்பட்டது.5-ந் தேதி மீனவர்கள் வேலைநிறுத்தம்

கருத்துகள் இல்லை: