புதன், 27 நவம்பர், 2013

காஞ்சி கொலை வழக்கு,ஜெயேந்திரர், விஜயேந்திரர் விடுதலை

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காஞ்சி மட பீடாதிபதி ஜெயேந்திரர் மற்றும் இளைய பீடாதிபதி விஜயேந்திரர் ஆகியோர் இன்று அவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு நிருபிக்கப்படவில்லை என்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

புதுச்சேரி அமர்வு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு விசாரணையில், நீதிபதி சி.எஸ்.முருகன் இன்று இந்தத் தீர்ப்பை அளித்தார்.
இந்த இருவரைத் தவிர இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 21 பேர் மீதான குற்றச்சாட்டுகளையும் அரசு தரப்பு நிருபிக்கத் தவறிவிட்டது என்று கூறி நீதிபதி அவர்களையும் விடுவித்தார்.

வழக்கு தீர்ப்பு இப்படித்தான் அமையுமென்று தாங்கள் ஏற்கனவே எதிர்பார்த்தோம் என்று பீடாதிபதிகளுக்காக வாதாடிய வழக்கறிஞர்களில் ஒருவரான செந்தில் சுப்ரமணியன் கூறியதாக நமது செய்தியாளர் கோபாலன் தெரிவிக்கிறார். அரசு தரப்பு வழக்கறிஞர் தேவதாஸ் , தாங்கள் இந்த வழக்கு குறித்து போதிய சாட்சியங்களை முன்வைத்திருந்ததாகவும், தீர்ப்பு தங்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்றும் கூறினார். இது குறித்து மேல் முறையீடு செய்வது பற்றி அரசுதான் முடிவெடுக்கும் என்றார் அவர்.
2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி சங்கரராமன் வரதராஜப் பெருமாள் கோவில் வளாகத்திலேயே சிலரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். காஞ்சி மடத்தின் முன்னாள் ஊழியரான இவர் , காஞ்சி மடாதிபதியின் மீதும் இளைய மடாதிபதியின் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

இந்த கொலை சம்பவத்தை ஒட்டி, காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரரை தமிழகப் போலிசார் 2004ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று ஹைதராபாத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது

( thanks BBC Tamil )

கருத்துகள் இல்லை: