வெள்ளி, 16 மே, 2014

2014 தேர்தல் : Elections அ.தி.மு.க. 37 ADMK 37 in TAMILNADU

நடந்து முடிந்த 16வது இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் இன்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அ.தி.மு.க. 37 இடங்களைக் கைப்பற்றி பெரும் வெற்றிபெற்றுள்ளது.


இந்தத் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பாரதீய ஜனதாக் கூட்டணி, இடதுசாரிகள் என தமிழ்நாட்டில் ஐந்து முனைப் போட்டி நிலவியது. ஏப்ரல் 24ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கான வாக்குகள் 42 மையங்களில் எண்ணப்பட்டன. அதேபோல புதுச்சேரி தொகுதிக்கான வாக்குகள் நான்கு மையங்களில் எண்ணப்பட்டன. 


பலத்த பாதுகாப்புக்கு இடையில், காலை எட்டு மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கிய நிலையில், துவக்கம் முதலே அ.தி.மு.க. முன்னிலை வகித்துவந்தது. தற்போதைய நிலவரப்படி 20 தொகுதிகளுக்கு அதிகாரபூர்வமாக முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 19 தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது. மீதமுள்ள தொகுதிகளில் 18 தொகுதிகளில் அக்கட்சி முன்னிலை வகிக்கிறது. தர்மபுரி தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் முன்னிலை வகிக்கிறார். கன்னியாகுமரி தொகுதியில் பாரதீய ஜனதாக் கட்சியின் பொன். ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றுள்ளார். புதுச்சேரியில் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸின் 2 லட்சத்து 55 வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறார்.


37 இடங்களைக் கைப்பற்றியதன் மூலம் பாரதீய ஜனதாக் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதையடுத்து, அக்கட்சியின் தலைமையகத்திலும் முதல்வர் ஜெயல்லிதாவின் இல்லம் அமைந்திருக்கும் போயஸ்கார்டனிலும் தொண்டர்கள் காலை முதலே குவிந்தனர். அக்கட்சியின் அபார வெற்றியை, வெடிவெடித்தும் கோஷங்களை எழுப்பியும் அவர்கள் உற்சாகமாக்க் கொண்டாடினர்.
இந்த வெற்றி குறித்து பிற்பகலில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, தமிழக மக்கள் என் மீது வைத்த நம்பிக்கைகாக நாங்கள் உழைப்போம். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சியாக செயல்படுவீர்களா என்ற கேள்விக்கு பொறுப்புள்ள கட்சியாக செயல்படுவோம் என்று பதிலளித்தார் ஜெயலலிதா. அதோ போல, தன் சொந்த முயற்சியின் காரணமாகவே அ.தி.மு.க. இந்த வெற்றியைப் பெற்றிப்பதாகவம் அவர் கூறினார்.

இந்தத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி 8 இடங்களில் போட்டியிட்டு ஒரு தொகுதியை மட்டுமே வெல்லும் சூழல் காணப்பட்டாலும், நாடு முழுவதும் அக்கட்சி வெற்றிபெற்றிருப்பதையடுத்து, அக்கட்சியின் மாநிலத் தலைமையகமான கமலாலயத்தில் தொண்டர்கள் குவிந்தனர். மேளம் முழங்க வெடிவெடித்து, அவர்கள் கொண்டாடினர்
தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் தொண்டர்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. இன்று நள்ளிரவுக்குள் தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை: