திங்கள், 10 செப்டம்பர், 2012

உதயன் 10Sep2012 : கூட்டாட்சிக்குத் தயார்








கூட்டாட்சிக்குத் தயார் முஸ்லிம் காங்கிரஸுக்கு கூட்டமைப்பு அழைப்பு


கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் கூட்டாட்சியை ஏற்படுத்துவதற்குத் தாராளமான விட்டுக்கொடுப்புகளுடன் செயற்படுவதற்குத் தயாராக இருக்கிறார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்றுப் பகிரங்கமாகவே அறிவித்தார். 
 
கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் முடிவுகள் வெளிவந்துள்ள சூழ்நிலையில் கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் பேச்சுக்களை நடத்துவீர்களா? என்று கேட்ட போதே இந்த அறிவிப்பை விடுத்த சம்பந்தன், மேலும் கூறியதாவது, 
அரசு தனது வளங்களைத் துஷ்பிரயோகம் செய்த நிலையில் பயமுறுத்தல்கள், லஞ்சம், ஊழல்கள் தலைவிரித் தாடிய நிலையில் தமிழ் பேசும் மக்கள் தமது மன உணர்வுகளை இந்தத் தேர்தலின் மூலம் வெளிக்காட்டியுள்ளனர். இப்போது சாவி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கைகளில் உள்ளது. 
 
தமிழ் பேசும் மக்களுக்கு நிம்மதியான வாழ்வே இன்றைய தேவை. எல்லா மக்களும் ஒத்துழைத்து வாழக்கூடிய வகையில் நாங்கள் செயற்படுவோம் என்பதைக் குறிப்பிட்டு வைக்க விரும்புகிறோம். 
 
அரசை எதிர்த்துப் போட்டியிட்ட கட்சிகளான தமிழ்க் கூட்டமைப்பு,  ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் என்பன 22 ஆசனங்களுடன் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் உள்ளன. இந்தப் பின்னணியின் கீழ், கிழக்கு மாகாண சபையில் கூட்டாட்சியை ஏற்படுத்துவதற்குத் தாராளமான விட்டுக்கொடுப்புடன் செயற்படுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே இருக்கிறது என்றும் குறிப்பிட்டார் சம்பந்தன் எம்.பி. 

--------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை: